ஜார்கண்டில் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல வற்புறுத்தி முஸ்லீம் இளைஞரை இந்துத்துவா கும்பம் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைமையிலான மோடி அரசு பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து சங்கபரிவார அமைப்புகள் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கூச்சலிட்டு வருகின்றனர். மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் பதவியேற்ற போது ஜெய் ஸ்ரீராம் என்று மத ரீதியான முழக்கத்தை துவக்கினார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் சரைக்கேலா குர்சவானந்த் பகுதியில் 22 வயது முஸ்லிம் இளைஞரை ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று சொல்ல சொல்லி வற்புறுத்தி உள்ளனர். அவ்வாறு சொல்ல மறுத்த இளைஞர் தப்ரேஜை இந்துத்துவா கும்பல் கடுமையாக தாக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து படு காயங்களுடன் சாதர் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்ட தப்ரேஜ் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் தப்ரேஜ் உறவினர்கள் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து தப்ரேஜ் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தப்ரேஜ் தாக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.