tamilnadu

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து :

ஸ்ரீநகர், ஆக.11 - ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய மாநாடு கட்சி மனு தாக்கல் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் கருத்தை அறியாமலேயே அவர்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டது என்றும் அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேசிய மாநாடு கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களான முகமது அக்பர் லோன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவில் சில அம்சங்களை நீக்கி, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.  மேலும், அந்த மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டமும், அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவும், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளன.  ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டமும், அச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். சமஸ்தானமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்தபோது அமைதியையும், ஜனநாயகத்தையும் உறுதிசெய்யும் விதமாக, நன்கு பரிசீலிக்கப்பட்ட பிறகே அரசமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவு சேர்க்கப்பட்டது. அது, நிரந்தரமான சேர்க்கைதான். ஆனால், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் வாழும் மக்களின் கருத்தைக் கேட்காமலேயே அவர்களின் உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது என தெரிவித்துள்ளனர்.