சண்டிகர்:
பாஜக தொண்டர்கள், சிவந்த நிறமுடைய காஷ்மீர் இளம்பெண்களைத் திருமணம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள் என்று, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி, இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வக்கிரத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
“காஷ்மீர் விவகாரத்தை பேசத் துவங்கி விட்டாலே, பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்து விடுகிறார்கள்” என்றும் “அவர்கள் இனிமேல் காஷ்மீரில் உள்ள சிவப்பு நிறமுடைய அழகான பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும்” என்றும் அவர் கூறியிருந்தார். காஷ்மீருக்கான 370, 35ஏ சிறப்பு சட்டப்பிரிவுகளின் படி, காஷ்மீரிப் பெண்கள், காஷ்மீரி அல்லாத ஆண்களை திருமணம் செய்துகொண்டால், அவர்கள் ‘காஷ்மீர்’ மாநிலத்திற்கான குடியுரிமையை இழந்து விடுவார்கள். சொத்துக்களையும் இழக்க வேண்டியதாகும். தற்போது காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டுள்ளதால், அது பாஜக தொண்டர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்ற பொருள்படவே இவ்வாறு மலினமாக பேசியிருந்தார்.இதற்கு, கண்டனங்கள் எழுந்துவந்த நிலையில், “ஹரியானா மாநிலத்துக்கு இனி காஷ்மீரிலிருந்து மணப்பெண் கொண்டுவரலாம்” என்று அம்மாநில பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டாரும் மனவக்கிரத்தைக் கொட்டியுள்ளார்.“ஹரியானாவில் ஆண் - பெண் விகிதாச்சாரம் குறைந்தபோது அமைச்சர் தனகர் ஒரு யோசனை சொன்னார். நாம் ஏன் பீகாரில் இருந்து மருமகள்களைக் கொண்டுவரக்கூடாது என்றார். ஆனால், இப்போது காஷ்மீரில் பெண் எடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது” என்று கட்டார் கூறியுள்ளார்.
370 ரத்து மூலம் காஷ்மீரில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை மேம்படும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, மற்றொரு புறத்தில், காஷ்மீரின் அழகான பெண்களை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது என்று ஒரு மலினமான உரையாடலையும் பொதுவெளியில் பாஜக-வினர் நடத்தி வருகின்றனர்.