tamilnadu

பேருந்து-லாரி மோதல் புலம்பெயர் தொழிலாளர், ஓட்டுநர் பலி

சத்தீஸ்கர், மே 21- மகாராஷ்டிராவில் சிக்கித் தவித்த பீகார் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள பாக்நாடி சோதனைச் சாவடியிலிருந்து ஜார்க்கண்ட் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  சத்தீஸ்கர் மாநிலம் பீமேத்ரா மாவட்டத்தில் பேருந்து -லாரி மோதிக்கொண்டதில் புலம் பெயர் தொழிலாளர், ஓட்டுநர் பலியாயினர்.  காயமடைந்த எட்டு பேர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து ராய்ப்பூர்-பிலாஸ்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை 8.30 மணியளவில் தெம்ரி கிராமம் அருகே நடந்தது. புலம்பெயர் தொழிலாளர்களுடன் வந்த பேருந்து ஜார்கண்ட்-சத்தீஸ்கர் எல்லையை நோக்கி கொண்டிருந்தது. அப்போது எதிரிலிருந்து வந்த லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் தேவ்நாத் என்ற பீஹாரைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர் மற்றும் பேருந்து ஓட்டுநர் குஹராம் சோன்வானி சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பிஹார், ஜார்கண்ட் தொழிலாளர்கள் எனத் தெரிகிறது, இவர்கள் மகாராஷ்ட்ராவில் லாக்டவுனில் சிக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர் இதில் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், காயமடைந்தவர்கள் பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.