சூலூர் அருகே விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், கணவரின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் சேர்ந்த பழனிச்சாமி (77), கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும்விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவராக இருந்தவர். இவர் நேற்று இரவு 10 மணி அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கணவரின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது மனைவி கருப்பாத்தாள் (68) உயிரிழந்தார். இருவரது உடலும் சோமனூரில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் சோமனூரில் இருந்து அவர்களது சொந்த ஊரான அய்யம்பாளையத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து இறப்பிலும் இணை பிரியாத இந்த தம்பதியினரின் மரணம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.