tamilnadu

img

போர் விமான மரியாதை - மருத்துவ ஊழியர்கள்  ஏமாற்றம்

கோவை , மே 3- கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் போர் விமான மரியாதைக்காக வளாகத்தில் காத்திருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் போர் விமானங்கள் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்

கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், விமானப் படை சார்பில் போர் விமானங்கள் மருத்துவமனைகள் மீது மலர் தூவி மரியாதை செலுத்துவது என அறிவிக்கப்பட்டது.  இதன்படி, கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மீது சூலூர் விமான படைத்தளத்தில் இருந்து சி 130 போர் விமானங்கள் இரண்டு தாழ்வாக வட்டமிட்டு மரியாதை செலுத்தும் என்ற தகவல் பரவியது. இதற்கேற்ப விமான படை தரப்பில் வெளியிடப்பட்ட பட்டியல் கோவை  சூலூர் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் செய்தியாளர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். அம்மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில், போர் விமானங்கள் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். விமான படை தரப்பில் முறையான அறிவிப்பு வெளியிடப்படாததே குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோவை, திருப்பூர், நீலகிரியை சேர்ந்த 250 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டது.  இன்னும் நோயாளிகள் வந்தாலும் சமாளிக்க முடியும். தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இன்று கோவையை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது என்றார்.

மேலும், போர் விமானங்கள் மரியாதைக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்தது குறித்த கேள்விக்கு, தகவல் வந்ததால் காத்திருந்தாகவும், விமானங்கள் வராததால் ஏமாற்றமும் இல்லை, சங்கடமும் இல்லை. அதே உறுதியோடு பணியாற்றுவோம் என தெரிவித்தார்.

முன்னதாக கால் கடுக்க காத்திருந்த மருத்துவ ஊழியர்கள் சோர்ந்து விடக்கூடாது என்பதால் ட்ரோன் கேமராவை மருத்துவ மனையின் முன்னே பறக்கவிட்டு அதற்கு ஊழியர்கள் கையசைத்து தங்களை சமாதானப்படுத்திக் கொண்டனர்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத ஊழியர் ஒருவர் கூறுகையில், எங்கள் வேலையை நாங்கள் செய்து வருகிறோம். இந்த மரியாதையெல்லாம் யார் கேட்டார்கள். இவர்களாக நிற்க சொனனார்கள். பிறகு கலைந்து போகச்சொல்கிறார்கள் என்றார்.