tamilnadu

img

சட்டப்படியான போனஸ் வேண்டும் - கோவையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை,அக்டோபர்.21- மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்குச் சட்டப் படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. போனஸ் பேச்சுவார்த்தை தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த  18ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் போது தூய்மை பணியாளர்களை ஒப்பந்தம் செய்து உள்ள தனியார் நிறுவனம் ரூ.4000 போனஸ் தருவதாகத் தெரிவித்த நிலையில் தொழிற் சங்கங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து மீண்டும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த சூழலில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பலருக்கு 1800 ரூபாயும், ஒரு சிலருக்கு 3,500 ரூபாயும்  வங்கிக் கணக்கில் போனஸ் என அனுப்பப்பட்டு உள்ளது.
ஒப்பந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நிறைவடையும் முன்பாக தன்னிச்சையாக போனஸ் தொகையைத் தீர்மானித்து வங்கிக் கணக்கில் செலுத்தியதைக் கண்டித்து இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.