அக்டோபர் 31 அன்று கோவையில் பாஜக அறிவித்திருக்கும் பந்த் போராட்டத்தையொட்டி கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் வெடி விபத்து சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டும் வகையில், மேற்கொண்டு விசாரணையை மத்திய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருக்கிறது.
இந்த நிலையில் கோவையில் பதற்றத்தை உருவாக்கும் உள்நோக்கத்தோடு பாஜக சார்பில் வரும் 31ம் தேதி கடை அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போராட்டம் அமைதியான கோவையில் பதற்றத்தை உருவாக்கவே உதவும். எந்த வகையிலும் நிலவி வரும் அமைதி தொடர்வதற்கு வழிவகுக்காது என கோவையின் அனைத்து பகுதியினரும் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் வரும் அக்டோபர் 31 அன்று பாஜக அறிவித்திருக்கும் பந்த் போராட்டத்தின் போது வன்முறையை உருவாக்கி கடைகள் சேதப்படுத்தப்படலாம் என கருதி, ''திறந்து வைத்திருக்கும் கடைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்.
பாஜக அறிவித்துள்ள பந்த் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், தேவையின்றி கோவையில் மத பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பிலும் கோவை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.