tamilnadu

img

வேலை கேட்டு மாணவர் சங்கம் யாத்திரை ; காவல்துறை அனுமதி மறுப்பு

கோவை, நவ. 9 -
வேலை கேட்டு யாத்திரை சென்ற மாணவர் சங்கத்தினரை காவல்துறை அனுமதி மறுத்து கைது செய்ததால், அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலை தருவேன் என பாஜகவின்மோடி அரசு வாக்குறுதி அளித்தது. ஆறு ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்த பிறகும் வேலை வாய்ப்பிற்கான எந்த திட்டத்தையும் பாஜக அரசு உருவாக்கவில்லை. அதேநேரத்தில் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு போன்ற மாணவர் விரோத நடவடிக்கையின் காரணமாக ஏராளமான மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
வேலையின்மை, கடும் பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்றவற்றின் காரணமாக மக்கள் பாஜக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக கலவரம் நடத்த சூழ்ச்சி செய்வதாக மாணவர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.  மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை கேட்டும், அனைத்து மாணவர்களும் கல்வியை உறுதி செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் யாத்திரை செல்ல இந்திய மாணவர் சங்கம் அறிவித்தது. 

இதன் ஒருபகுதியாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் கோவை சாந்தி திரையரங்கம் முன்பிருந்து சென்னை சட்டமன்றம் வரை வேலை எங்கே என கேட்டு புறப்பட்ட மாணவர் சங்கத்தின் யாத்திரைக்கு அனுமதி மறுப்பதாகவும், கைது செய்யப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் காவல்முறையினருக்கும் மாணவர் சங்கத்தினருக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர் சங்கத்தினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். 

சேலம்,
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.கண்ணன் தலைமை வகித்தார். இதில், சேலம் மாவட்டத் தலைவர் பகத்சிங், செயலாளர் கவின் ராஜ், நாமக்கல் மாவட்டத் தலைவர் தேன்மொழி, செயலாளர் சரவணன், கிருஷ்ணகிரி இளவரசன், தருமபுரி தமிழமுதன் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.