tamilnadu

img

குடிநீர் கோரி மறியல்

  கோவை , ஏப்.22 - 21நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து கோவையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவையை அடுத்த தடாகம் சாலை எம்ஜிஆர் காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 21நாட்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊரடங்கை கருத்தில் கொண்டு தனிமனித இடைவேளை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் தொடர்ந்து குடிநீர் வரவில்லை. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ள ஊரடங்கை இப்பகுதி மக்கள் முழுமையாக கடைபிடித்து வருகின்றனர். குடிநீர் வராததால் குடிநீர் வரும் இடங்களுக்கு சென்று தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ள நிலையில் , காவல்துறையினர் தண்ணீர் பிடிக்கவிடுதில்லை. அப்படியே தண்ணீர் பிடிக்க சென்றாலும் காவல்துறையினர் தங்களை தாக்குகின்றனர். இப்பிரச்சனை தொடர்பாக இப்பகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட எங்களின் குறைகளை கேட்டறியவில்லை. இதேபோல் அரசிடம் இருந்து எந்த வித நிவாரண பொருட்களும் வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல்துறையினர் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் வாரம் ஒரு முறை தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.  இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.