சிறு சத்தம் கேட்டாலே தெறித்து ஓடும் அணில் குட்டி 24 மணிநேரமும் இளைஞரிடமே ஒட்டி உறவாடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரி. ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் அடிபட்ட நிலையில் குட்டி அணி ஒன்று வந்துள்ளது.
இந்த அணிலை எடுத்து வைத்தியம் பார்த்து காயங்கள் ஆறும்வரை ஹரி பராமரித்து வந்துள்ளார். மேலும் தினமும் உணவளித்து வந்துள்ளார். துள்ளி குதித்து ஓடும் நிலையில் அருகில் உள்ள மரத்தில் விட்டுவிட்டு வந்துள்ளார். ஆனால் இவர் வீடு போய்ச்சேரும் முன்பே இவரை பின்தொடர்ந்தே வந்துள்ளது. இதனையடுத்து இவருடனே இருக்க பழகிவிட்டது. இதனைத்தொடர்ந்து அணிலுக்கு அப்பு என்கிற பெயர் சூட்டி பராமரித்து வருகிறார்.
ஹரி செல்லும் இடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் அவருடனே அணில் பயணித்து வருகிறது. கடந்த 8 மாத காலமாக ஹரியுடன் அணில் செல்லுமிடங்களில் எல்லாம் சுற்றி வருவதால் அணிலையும் ஹரியையும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து ஹரி கூறுகையில், எங்கள் வீட்டிற்கு அடிபட்ட நிலையில் அணில் வந்தது அதனை எடுத்து சத்துமாவு கொடுத்து வளர்த்து வந்தேன். நாள் முழுவதும் என்னுடன் தான் இருந்து வருகிறது. இரவு தூங்கும் போதும் என் உடைக்குள் தூங்கி கொள்ளும். மோட்டார் சைக்கிளில் வெளியே செல்லும்போது என்னுடனே பயணித்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றாலும் கூட அப்பு(அணில்) கீழே விழாமல் பிடித்துக் கொள்வான் என்றார்.