tamilnadu

img

மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கிய “ரஜினிகாந்த் சார்” பள்ளி

கோவை:
தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் உள்ள பெற்றோர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியதால், சம்பந்தப்பட்ட மாணவர்களை தனியார் பள்ளி நீக்கியுள்ள சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிஎஸ்பிபி (பத்ம சாஸ்திரி பால பவன்) என்கிற சிபிஎஸ்இ பள்ளி தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையிலும், கர்நாடகாவில் பெங்களூர், ஆந்திராவில் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது.திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்களின்மைத்துனரும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் இப்பள்ளியின் உரிமையாளராக உள்ளார். சென்னையில் இப்பள்ளியின் பங்குதாரராக ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த இருப்பதாக கூறப்படுகிறது. 

கோவை வடவள்ளி பகுதியில் இயங்கும் இந்த பிஎஸ்பிபி பள்ளியில் மிகவும் வசதிபடைத்தவர்களின் பிள்ளைகளே அதிகம் பயின்று வருகின்றனர். சுமார் ஐநூறுக்கும்மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளியை அப்பகுதி மக்கள் “ரஜினிகாந்த்சார் “பள்ளி என்றே அழைக்கின்றனர். தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ள நிலையில் இப்பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடர்ந்துநடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த அருணா என்பவரின் ஆண், பெண்இரட்டை குழந்தைகள் இந்த பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனாஊரடங்கால் இந்த பள்ளி ஆன்லைன் வாயிலாக கடந்த 1ஆம் தேதி முதல் வகுப்புகள் எடுக்கவுள்ளதாக பெற்றோர்களுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டு, அதற்காக பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர் அடங்கிய வாட்ஸ் அப் குழு துவங்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகளுக்கான லாகின் ஐ.டி., பாஸ்வேர்டு ஆகியவையும் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், 1 ஆம் தேதி ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்ட சில மணி நேரங்களில், இவர்களின் இரட்டை குழந்தைகள் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன், பெற்றோர்கள், ஆசிரியர் அடங்கிய வாட்ஸ் அப் குழுவிலிருந்து பெற்றோர் அருணாவும் நீக்கப்பட்டுள்ளார். 
என்ன காரணத்திற்காக தன்னை குழுவில் இருந்து நீக்கினர் என்பது தெரியாமல்  அதிர்ச்சியடைந்த அருணா பள்ளியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் கடந்த ஐந்து நாட்களாக எவ்வித விளக்கமும் பள்ளி தரப்பில் தெரியப்படுத்தவில்லை. இச்சூழலில் தற்போது எவ்வித விளக்கமுமின்றி அவர்களின் இரட்டை குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கூறுகையில், இப்பள்ளியில் திடீரென தாங்கள் மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இதேபோன்று எந்தவித காரணமுமின்றி குழுவிலிருந்து நீக்கப்பட்டு, குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதிக்காமல், பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பொது முடக்கத்தால் வேலையிழப்பு, ஊதிய குறைப்பு ஆகிய காரணங்களால் செய்வதறியாமல் உள்ளநிலையில் பள்ளியின் செயல் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி பிஞ்சு குழந்தைகளுக்கு மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் பள்ளி நிர்வாகத்தில் உள்ள எங்களோடு நெருக்கமாக உள்ள ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, பெற்றோர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியதும், அதில் கல்வி கட்டணம் எவ்வளவு என பேசியதுதான் பிரச்சனை என்கின்றனர். பள்ளிகள் எப்போது திறக்கும் என்கிற சூழலே இல்லாத நிலை தற்போது உள்ளது. இந்நிலையில் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தினமும் பள்ளி செல்லும்போது பெற்றோர்கள் ஒன்றுக்கொன்று பழகிய அடிப்படையில் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினோம். இந்த காரணத்திற்காக எங்கள் பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளனர் என்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. ஒழுக்கம், படிப்பு என பல தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த தங்களின் குழந்தைகளை மிகவும் பாதித்த இந்த சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யஉள்ளோம் என்றனர். இதுகுறித்து விளக்கம் பெறுவதற்கு பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் தொடர்பு கிடைக்கப்பெறவில்லை.  
சிஸ்டம் கெட்டுப்போச்சு. ஆகையால் அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறி வருகிறார். இச்சூழலில் அவரின் குடும்பம்நடத்தும் பள்ளியில் சிஸ்டமே சீரழிந்து கிடக்கிறது. வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினால் பள்ளியை விட்டே நீக்குகிறது “ரஜினிகாந்த் சார் பள்ளி” என வாட்ஸ் அப்பிலேயே மீம்ஸ்கள் பரவ துவங்கியுள்ளன.    (ந.நி)

;