tamilnadu

img

கால் கொலுசை விற்று கபசுர சூரணம் தயாரித்து விநியோகித்த ஏழை பெண் 

கோவை , ஏப்.28-  கோவை அன்னூர் அருகே  தனது கால் கொலுசை விற்று , 2ப் பணத்தை கொண்டு தனது பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி கொடுத்த ஏழை பெண்ணின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அன்னூர் அருகே பொண்ணே கவுண்டன்புதூர்  பகுதியில் வசித்து வருபவர் கவிபிரியா(22). பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் அருகில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிகிறார். மிகவும் ஏழையான குடும்பத்தை சார்ந்தவர்.

இதனிடையே அன்னூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரால் மக்களுக்கு கொரோனா நோய் ஏற்படாமல் தடுக்க எதிர்ப்பு சக்திக்காக கபசுரசூரணம் பொடி வாங்கி காய்ச்சி அக்குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாலிபர் சங்க உறுப்பினரான கவிபிரியா, தானும் தன் பங்கிற்கு ஏதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து தனது ஊரான பொண்ணே கவுண்டன்புதூர் மக்களுக்கும் கபசுரசூரணம் கொடுக்க விரும்பினார்.
ஆனால் , தன் கையில் பணம் இல்லாததால் தனது கால் கொலுசை ரூ.1000க்கு விற்றுள்ளார். இந்த பணத்தை கொண்டு கபசுர பொடியை வாங்கி காய்ச்சி மக்களுக்கு விநியோகித்துள்ளார்.  
இதுகுறித்து கவிபிரியா கூறுகையில், "மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். ஏழை, எளிய எனது மக்களுக்காக தான் எனது கால் கொலுசை அருகில் உள்ள தெரிந்தவரிடம் விற்றேன்," என்றார்.
இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.