வீட்டு மனை கேட்டு சிறுபான்மை மக்கள் நலக்குழு மனு
ஈரோடு, ஜூன் 23- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர், ஏழை,எளிய உழைப்பாளி சிறுபான்மை மக்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டு திங்களன்று ஈரோடு ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு வட்டாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முஸ்லீம் மற்றும் கிறித்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களின் நிலையை அறிந்த சிறுபான்மை மக்கள் நலக்குழு முயற்சித்து 1500 பேரிடம் இலவச வீட்டுமனை கேட்கும் விண்ணப்பங்களைப் பெற்றது. அதனைத் தொகுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்டது. இதில், மாவட்டத் தலைவர் இஸாரத்தலி, செயலாளர் ப.மாரிமுத்து, மூத்த தலைவர் கே.துரைராஜ், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை பொறுப்பாளர் சி.முருகேசன் மற்றும் ஷேக்தாவூத் (எ) கண்மணி, கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குபட்ட பெரும்பாலை மற்றும் ஆலமரத்தூர் கிராமத்தில் உள்ள, பட்டியலின மக்களுக்கு, சொந்த விவசாய நிலம் இல்லை, பெண்கள் நூறு நாள் வேலை செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். சொந்தமாக வீடு கட்ட பலருக்கு இடம் இல்லை பழைய வீட்டிலேயே இரண்டு மூன்றாக தடுத்து புதியதாக திருமணமானவர்கள் வசிக்கின்றனர். எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு எங்கள் பகுதியிலேயே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என தருமபுரி ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் மனு அளித்தனர்.