அன்னூர் மே. 5 -
அன்னூர் அருகே பசூர் பகுதியில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சம்பள பாக்கியினை உடனடியாக பெற்றுதரக் கோரி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட பசூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒருநாள் கூலியாக 350 ரூபாய் வரை நூற்பாலை சம்பளம் கொடுத்து வந்துள்ளது. இச்சூழலில் நூற்பாலையில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் நிறுத்தி வைத்திருந்தது. இதையடுத்து தொழிலாளர்கள் நூற்பாலை நிறுவனத்திடம் நிலுவையிலுள்ள சம்பளத்தை திருப்பித் தருமாறு கோரிய போது நிர்வாகம் அலட்சியத்துடன் பதிலளித்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆவேசமடைந்த வட மாநிலத் தொழிலாளர்கள் திங்களன்று பசூர் பகுதியிலுள்ள அன்னூர் காவல் நிலையத்தில் நீதிகேட்க சென்றபோது அன்னூர் காவல் துறை அதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி அவர்களை நூற்பாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அன்னூர் வட்டாட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக நூற்பாலை நிர்வாகத்திடம் அன்னூர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முதல் மாத சம்பள பாக்கியை ஒரிரு தினங்களில் தருவதாக தொழிலாளர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.