கோவை குற்றாலத்தில் வனத்துறை சார்பில் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நுழைவு கட்டணத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
கோவை மாவட்டம் சாடிவயல் போளுவாம்பட்டி வனப்பகுதியில் குற்றால அருவி அமைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கமாக உள்ளது. போளுவாம்பட்டி வனச்சரம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வனத்துறை சார்பில் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நுழைவு கட்டணத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
2 இயந்திரங்கள் வைத்து நுழைவுச்சீட்டை அச்சிட்டு பணத்தை பெற்று கொண்டு, அரசுக்கு ஒரு இயந்திரத்தில் பதிவாகும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கான தொகை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இயந்திரத்தில் மூலம் வசூலிக்கப்படும் தொகையை அதிகாரிகளே எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வனவர் ராஜேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.