tamilnadu

img

இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்கிடுக; பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தல்

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள  பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக தலையிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுபபினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒன்றிய நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, அரசுடைமை பொது இன்சூரன்ஸ் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளது ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 54 மாதங்களாக நிலுவையில் உள்ளது என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். அரசுடைமை பொது இன்சூரன்சில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கடந்த 01.08.2017 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் போல அல்லாமல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது அலுவலக்களைத் திறந்து பொது மக்களுக்கு மிகச் சிறப்பான சேவையாற்றி வருகின்றன என இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை கட்டுப்பாட்டு ஆணையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இன்சூரன்ஸ் துறை எந்த நோக்கத்திற்காக தேசவுடைமையாக்கப்பட்டதோ அந்த நோக்கங்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசுடமை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களது உயிரைப் பணயம் வைத்து பொது மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகின்றனர். என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறேன். இப்படி சிறப்பான சேவையாற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் துறை ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரு சிறப்பான ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்களே என்பதில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

2021ம் நிதியாண்டில் அரசுடைமை பொது இன்சூரன்ஸ் நான்கு கம்பெனிகளும் ரூ. 72 ஆயிரம்  கோடியை பிரீமியமாக வருவாய்த் திரட்டியுள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இத்தகைய வளர்ச்சி குறிப்பிடத்தக்கது.

2012 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் ஒன்றிய அரசுக்கு பங்கு ஆதாயமாக ரூ.3 ஆயிரம் கோடியை அளித்தன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே சிறப்பான சேவையாற்றி வரும் அரசுடைமை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கப்பட வேண்டும். இது குறித்து நிதித்துறை அமைச்சகத்திற்கு உரிய அறிவுரையை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

;