tamilnadu

img

கோவையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன

கோவை உக்கடம் பகுதியில் உள்ள மீன் மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் செவ்வாயன்று அதிகாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
 இந்த சோதனையில், பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும் வகையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 16 குழுக்களாகப் பிரிந்து செயல்பட்ட அதிகாரிகள், மீன் மார்க்கெட்டில் உள்ள ஒவ்வொரு கடையையும் தீவிரமாகச் சோதனை செய்தனர். இந்த சோதனையில், குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தாலும் கெட்டுப்போன நிலையிலிருந்த மீன்கள், சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்ட மீன்கள் என பல்வேறு வகையான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் பின்னர் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மீன்களின் மொத்த மதிப்பு சுமார் 50,000 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது "பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. கெட்டுப்போன மீன்களை உட்கொள்வதால் பல்வேறு வகையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மீன் வியாபாரிகள் சிலர், "சில நேரங்களில் மீன்கள் சற்று விரைவாகக் கெட்டுப்போய்விடும். இதனைத் தவிர்க்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறோம். ஆனால், இன்று நடந்த சோதனையில் அதிகளவில் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் வருத்தமாக உள்ளது" என்றனர்.