கோவை. ஏப்ரல். 17 -
கேரளா ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ஜெயலட்சுமி தம்பதியினர் கோவையிலுள்ள கவுண்டர் மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட உடன் அந்த நிறுவனத்தில் வேலையும் பறிபோனது. இதனால் அவர்கள் கொடுத்த அந்த அறையில் தங்கியிருந்தனர். மில்லில் வேலை இல்லாத காரணத்தினால் அவர்கள் உணவுக்கு அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு 5 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இதையடுத்து அத்தம்பதியினர் கேரள மாநிலத்திற்கு செல்ல முயல்கையில் கேரள எல்லையான காக்கா சாவடி பகுதிக்குச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கேரளாவுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். நீங்கள் தற்போது எங்கு இருக்கிறீர்களோ அங்கு தான் தங்கி இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை உங்களை அனுமதிக்க முடியாது என கூறிவிட்டனர். இதனால் என்ன செய்வது என புரியாமல் அத்தம்பதியினர் சமூக வலைதளத்தில் தங்களுடைய சூழ்நிலை குறித்து தன்னுடைய 5 மாத குழந்தையுடன் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர். இதில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரியிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து கோவை வடக்கு வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து 13 ஆயிரம் ரூபாயை நிறுவன உரிமையாளரிடம் இருந்து பெற்றுக்கொடுத்துள்ளனர். மேலும் ஊரடங்கு காலம் முடியும்வரை பணியாற்றிய மில்லிலேயே தங்கவும், உணவளிக்கவும் ஏற்பாடுகளை செயதனர்.