கோவையில், இணைய வழி குற்றத்தில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி விக்னேஷ்(31) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகரைச் சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ், ஆனந்தகுமார் ஆகியோர் தங்களது கிரெடிக் கார்டுகள் கடன் வழங்கும் செயலிகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தனர்.
இதை அடுத்து, காவல்துறையினர் மோசடி, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோவைப் புதூரைச் சேர்ந்த விக்னேஷ்(31) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் பொறியியல் பட்டதாரியான விக்னேஷ் தனது நண்பர்களின் ஆவணங்கள், செல்போன் எண்களை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி, அவர்களின் வங்கிக் கடன் அட்டைகள் மற்றும் இணையம் கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் பெற்று ரூ.6 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இணைய வழி குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.