tamilnadu

img

வேலை நேரத்தை நீட்டிக்காதே தனித்து குரல் எழுப்பி சிஐடியு போராட்டம்

கோவை, ஏப்.21  போராடிப்பெற்ற உரிமைகளை பறிக்கும் விதமாக 8 மணி நேர வேலையை 12 மணிநேரமாக உயர்த்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து கோவையில் சிஐடியுவினர் அவரவர் வீடுகள் முன்பு நின்று தனித்து குரல் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டில் முடக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய மோடி அரசு தொழிற்சாலைகளில் 8 மணி நேரத்திற்கு பதிலாக, 12 மணி நேரம் வேலை என்கிற நாசகர சட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதற்கு சிஐடியு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், ஊரடங்கு காலத்திற்கான ஊதியம் வழங்க வேண்டும்.  முறைசாரா தொழிலாளர்களுக்கு, உணவு மற்றும் பொருட்கள் வழங்க வேண்டும். மருத்துவர், துாய்மை பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் கண்டன இயக்கத்தை நடத்த சிஐடியு மத்திய குழு அறைகூவல் விடுத்தது.

இதனையொட்டி கோவையில் சிஐடியு, வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் ஊழியர்கள் அவரவர் வீட்டின் முன்பு தனித்து குரல் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  செவ்வாயன்று காலை, 10.30 மணி முதல், 10.40 மணிவரை வீட்டு வாசலில் கோரிக்கைகளை வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பாதாகை மற்றும் கொடிகளை ஏந்தி தனித்து போராடினர். ஊரடங்கால் கூட்டம் கூடக் கூடாது என்கிற நிலையில் இவ்வமைப்புகளின் ஊழியர்கள் அவரவர்  தங்களின் வீட்டின் முன்பு குடும்பத்துடன் கோரிக்கைகளை வலியுறுத்தி தனித்து போராடிய நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.