உலகம் முழுவதும் ஆறுகளே நாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய ஆறுகளை பாதுகாப்பதில் இன்று மக்களும் அரசுகளும் விழிப்புணர்வோடு இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் இதையே பல ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் தற்போது கோவை திருப்பூர், கரூர், ஈரோடு என 4 மாவட்டங்களில் ஓடும் நொய்யல் ஆறு குடிநீராக மட்டும் இல்லாமல் 36 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பாசன வசதிக்கும் பயன்படுகிறது.
இந்நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் நகரத்தின் கழிவுகளோடு தொழிற்சாலை கழிவுகள் கலந்து முழுவதும் பாழாகி உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் முரளிசங்கர், ஆராய்ச்சி மாணவி காயத்ரி, பாரதிதாசன் பல்கலைக்கழக கடல்சார் அறிவியல் துறை பேராசிரியர்கள் ராஜாராம், சந்தானம், பாரதியார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் முனியசாமி ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே காலநிலையில் 3 முறை நீர் மாதிரிகள், ஆற்றில் வாழும் நண்டுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளது. இதில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கன உலோகங்களின் அளவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேராசிரியர் முரளிசங்கர், கூறியதாவது “அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (யுஎஸ்இபிஏ) தரத்தின்படி ஒரு லிட்டர் நீரில் 0.5மில்லிகிராம் இருக்க வேண்டிய துத்தநாகம் 2.75 மில்லிகிராமும், 0.05 மில்லிகிராம் இருக்க வேண்டிய காரியம் 10.74 மில்லிகிராமும், இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) தரத்தின்படி 250 மில்லிகிராம் இருக்க வேண்டிய குளோரைடு 1,010 மில்லிகிராமும், 45 மில்லிகிராம் இருக்கவேண்டிய நைட்ரேட் 250 மில்லிகிராமும், 200 மில்லிகிராம் இருக்கவேண்டிய நீரின் கடினத்தன்மை 1,075 மில்லிகிராமும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆற்றில் வசிக்கும் நண்டுகளின் உடலில் கன உலோகங்கள் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டதில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எஃப்ஏஓ) தரத்தின் படி ஒரு கிலோகிராமில் 30 மில்லிகிராம் இருக்க வேண்டிய துத்தநாகம் 51.72 மில்லிகிராமும், 0.05 மில்லிகிராம் இருக்க வேண்டிய காட்மியம் 0.22 மில்லிகிராமும், 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டிய காரியம் 19.91 மில்லிகிராமும் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, நொய்யல் ஆற்றில் எந்தெந்த இடங்களில் கழிவுகள் கலக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு காலங்களில் பல மாதிரிகளை சேகரித்து தொடர்ந்து ஆய்வுசெய்யும்போது மேலும் உறுதியான முடிவுகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வு முடிவு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தனது பணியை முறையாக மேற்கொள்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. ஆற்றில் கலக்கும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறா என்பதை கண்காணிக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியமும் தற்போது அம்பலமாகி உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளே முறையாக கடைபிடிக்கப்படாத சூழலில் மோடி அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை 2020 ல் உள்ள விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் நீர்நிலைகள் மேலும் மோசம் அடையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.