tamilnadu

img

கோவை கார் வெடி விபத்து : துணை ராணுவத்தினர் பாதுகாப்பு

கார் வெடி விபத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிறு அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால்  காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு 11.25 மணியளவில் ஜமேஷா முபீன் இல்லத்தில் இருந்து அவர் உள்பட 5 பேர் ஒரு பெரிய  மூட்டையை எடுத்து சென்றுள்ளனர். இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய 5 பேரை கைது தனிப்படை காவல்துறையினர் செய்துள்ளனர். இவர்களில் முகமது தல்கா  (25) , முகமது அசாருதீன் (23) இந்த இருவரும் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதுபோல் முகமது ரியாஸ்  (27), ஃபிரோஸ் இஸ்மாயில் வயது (27), முகமது நவாஸ் இஸ்மாயில்  (26).  இந்த மூன்று பேரும் உக்கடம் G.M.நகர்  பகுதியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் ஜமேஷா முபின் பயணித்த காரில் ஆணி, பால்ஸ் குண்டுகள், இரண்டு சிலிண்டர் தடயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜமேஷா முபின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து ஜமேஷா முபினுக்கு கார் கொடுத்தது யார்? அவரது பிண்னணி என்ன என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உக்கடம், டவுன் ஹால் மற்றும் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.