வாய் பகுதியில் காயத்துடன் காட்டிற்குள் சுற்றத்திரியும் பாகுபலி யானை.. யானை இருக்குமிடத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முயன்று வரும் வனத்துறை..பிற யானையுடன் நடந்த மோதலில் காயமா அல்லது வேறு காரணமா என யானையை மருத்துவ குழுவினர் பிரிசோதித்த பின்னரே தெரிய வரும் என வனத்துறை தகவல்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது..ஆண்டில் ஒரு சில மாதங்கள் மட்டும் அடர்ந்த காட்டுக்குள் சென்று விடும் இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவதும் விவசாய பயிர்களை உண்பதும் வாடிக்கையாகி விட்டது..மாத கணக்கில் ஒரே பகுதிகளில் சாதாணமாக உலா வந்தபடி இருக்கும்..இதன் பிரமாண்ட உருவம் காரணமாக பாகுபலி என்றழைக்கப்படும் இந்த யானையை மூன்று கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயன்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன..ஆண்டுக்கணக்கில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றி வந்தாலும் இதுவரை இந்த யானை யாரையும் தாக்கவோ அல்லது அச்சுறுத்தவோ கூட செய்யாமல் தான் வந்த வேலையான வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை உண்டு விட்டு பவானி ஆறு அல்லது வனத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் அருந்தி விட்டு சென்று விடும்.. பசித்தால் மீண்டும் வரும்..தன்னை நோக்கி ராக்கெட் வெடிகள் வீசி துன்புறுத்தி விரட்ட முயல்பவர்களை கூட பாகுபலி யானை தாக்க முற்படாமல் கடந்து செல்வது இதன் இயல்பு..இந்நிலையில், இன்று அதிகாலை ரோந்து சென்ற வனத்துறையினர் சமயபுரம் அடுத்துள்ள வனப்பகுதியில் பாகுபலி யானை வாய் பகுதியில் காயத்துடன் நடந்து செல்வதை கண்டுள்ளனர்..இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் பாகுபலி யானையை கண்காணிக்க தனி குழுக்களை அமைத்து உத்திரவிட்ட வனத்துறை உயரதிகாரிகள் அதற்கு ஏற்பட்ட காயத்திற்கு காரணம் குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.. முதற்கட்ட ஆய்வில் பாகுபலியை கண்ட இடத்தில் இரண்டு யானைகளின் தாறுமாறான காலடி தடங்கள் உள்ளதால் இரு யானைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பாகுபலி காயமடைந்திருக்கலாம் என கருதுகின்றனர்.. ஆனால், காட்டுப்பன்றி வேட்டைக்கு பயன்படுத்தப்படும் அவுட்டுக்காயை யானை எடுத்து கடிக்கும் போது வெடித்து காயம் ஏற்பட்டதா, கண்மூடித்தனமாக யானை மீது வீசப்பட்ட ராக்கெட் வெடிகளால் காயம் ஏற்பட்டதா என்ற கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்..யானையின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கைக்கு பின்னரே அதன் காயத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்..தற்போது பாகுபலி யானை ஓரிடத்தில் நிற்காமல் அடர்ந்த வனப்பகுதி நோக்கி நகர்வதால் அதன் இருப்பிடத்தை கண்டறியவும் பின் தொடரவும் வனத்துறையினர் திணறி வருகின்றனர்..காயமடைந்த யானையை ஓரிடத்தில் சுற்றி ளைத்து இன்று மாலை அல்லது நாளை காலை தனி வனத்துறை மருத்துவ குழுவினர் பாகுபலி யானையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்