கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சங்கர் (வயது 29). பொறியாளரான இவர், ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான நிலையில் அதன்மூலம் சேமித்து வைத்த பணம் அனைத்தையும் இழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, நண்பர்களிடமும் கடன்கள் வாங்கி, ஆன்லைனில் தொடர்ந்து விளையாடியுள்ளார். எல்லா பணத்தை இழந்த சங்கர், விரக்தியில் வெளியூருக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, ராம் நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து, அவ்விடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து, இதுவரை 35க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.