இந்தியாவில் 25 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் ஆறு லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் திருப்பூர் கோவை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் விசைத்தறிகள் இருக்கின்றன. இவைகளில் 90 சதவிகித தறிகள் கூலி அடிப்படையில் மட்டும் இயங்குகின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் இடையே அரசு தரப்பில் கலந்து பேசி அரசு அறிவிக்கின்ற கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் சரிவர கொடுப்பதில்லை. கடந்த காலங்களில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா நோய் தொற்று போன்ற காரணங்களால் இத்தொழில் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. தற்போது நூல் விலை ஏற்றம் இரக்கம், உலகப் பொருளாதார சூழ்நிலை போன்ற காரணங்களால் விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் 1200 அடிக்கு கீழாக நீர்மட்டம் சென்று விவசாயம் செய்து வாழ வழி இல்லாமல் விசைத்தறி தொழிலுக்கு மாறி,
திருப்பூர், கோவை மாவட்டங்களில் கிராமப்புறங்களில் விசைத்தறி தொழில் வந்ததால் கிராமப்புற தொழிலாளர்கள் பயன் பெற்று வந்தனர். தற்போது கிராமப்புற தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலை விட்டு வேறு தொழில் தேடி செல்கின்றனர். விசைத்தறிகளோ பழைய இரும்பு விலைக்கு உடைத்து விற்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் நவீன தறிகளின் வருகையால் (சுல்ஜர், ஏர்ஜட்) விசைத்தறி தொழிலானது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. வருங்காலங்களில் விசைத்தறி தொழிலை காப்பாற்ற இருக்கின்ற விசைத்தறிகள் பழைய இரும்பு விலைக்கு உடைபடாமல் இருக்க விசைத்தறிகளுக்கும் கைத்தறிகளுக்கு போல் ரக ஒதுக்கீடு கிடைத்திட வேண்டும். மேலும் இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான சுல்ஜர், ஏர்ஜெட் தறிகளை நிறுவி வருகின்றன அதனால் சாதாரணமானவர்கள் தொழில் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு, தொழிலை கைவிட்டு செல்லக்கூடிய நிலை ஏற்படும். அதன் பின் கார்ப்பரேட் நிறுவனங்கள் வைக்கின்ற விலைக்கு மக்கள் துணிகளை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். ஆகவே ரக ஒதுக்கீடு மற்றும் சாமானியர்கள் தொழில் செய்கின்ற வகையில் சலுகைகள் வழங்கினால் விசைத்தறி தொழில் காப்பாற்றப்படும். இந்தியாவில் 130 கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ளது.
உள்நாட்டு சந்தை என்பது மிகப்பெரிய வணிகம் ஆகும். ஆனால் பிற நாடுகள் வரி இல்லாமல் வந்து வணிகம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உள்நாட்டு சந்தையை பிற நாடுகள் ஆக்கிரமித்து இருக்கின்றன. இதனால் உள்நாட்டு சந்தையும் பாதிக்கப்பட்டு தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். விசைத்தறி தொழிலை காப்பாற்ற கைத்தறி துணிகளை போன்ற கூட்டுரவு துறையின் மூலம் விற்பனை செய்வதை போல விசைத்தறி துணிகளையும் மேற்படி விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய அரசு வழிவகை செய்திட வேண்டும். விசைத்தறி துணிகளை ப்ளீச்சிங் டைப்பிங் பிரின்டிங் செய்ய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கொடுக்க வேண்டும். பள்ளி சீருடை, இலவச வேட்டி சேலை, அரசு மருத்துவமனைகள் அரசுத்துறை ஊழியர்கள் சீருடைகள் போன்றவற்றை விசைத்தறிகளில் உற்பத்தி செய்து அரசு நேரடியாக கொள்முதல் செய்தால் விசைத்தறி தொழிலை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றலாம். அப்புகுட்டி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம்.