tamilnadu

img

விவசாய விரோத சட்டங்களை உடனே திரும்ப பெற வலியுறுத்தி கிளர்ந்தெழுந்த தொழிலாளி வர்க்கம்

இந்திய நாட்டின் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் வேளாண் விரோத சட்டங்களை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்கிற ஆவேச முழக்கத்துடன் கோவையில் திங்களன்று ஆயிரக்கணக்கான உழைப்பாளி மக்கள் வெகுண்டெழுந்து போராட்ட களம் கண்டனர்
கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து மக்கள் விரோத சட்டங்களை இயற்றி வருகிறது. இதன்தொடர்ச்சியாக இந்திய நாட்டு விவசாயத்தை கார்ப்பரேட்கள் கைப்பற்றும் வகையில் வேளாண் விரோத சட்டங்களை இயற்றியது. நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களையும் நடத்தாமல்,, நிலைக்குழுவிற்கு அனுப்பாமல் சர்வாதிகாரமாக மூன்று சட்டங்களை இயற்றியது. இதனை எதிர்த்து கடந்த ஒரு வருட காலமாக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தலைநகர் டெல்லியிலேயே தங்கி கடந்த 13 மாதங்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள்  ஆவேச மிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த பிறகும் ஒன்றிய அரசு கார்ப்பரேட்களின் நலனே முக்கியம் என்கிற நிலைப்பாட்டை எடுத்து விவசாயிகளின் கோரிக்கையை புறந்தள்ளி வருகிறது. இதனையடுத்து செப்.27 பாரத் பந்த் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகளின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது. இப்போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதேபோல அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தொழிலாளி வர்க்கத்தை களம் இறக்குவது என முடிவெடுத்து அறிவித்தது. 
இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் எழுச்சிகரமான கிளர்ச்சி போராட்டங்கள் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசியல் இயக்கங்கள், மாதர், மாணவர், வாலிபர் இயக்கங்கள் களத்தில் இறங்கி ஒன்றிய அரசிற்கு தங்களுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய மையங்களில் ஆவேசமிக்க ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கிவைத்தார். 
இதில் விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு தலைவர் சு.பழனிச்சாமி, இளங்கோவன், மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் எல்பிஎப் மு.ரத்தினவேல், சிஐடியு கிருஷ்ணமூர்த்தி, ஐஎன்டியுசி பி.சண்முகம், ஏஐடியுசி எம்.ஆறுமுகம், எச்எம்எஸ் டி.எஸ்.ராஜாமணி, எம்எல்எப் ஏ.பழனிச்சாமி, ஏஐசிசிடியு ஆர்.தாமேதரன், எஸ்டிடியு என்.ரகுபுநிஸ்தார் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையம் முன்பு கூடினர். அப்போது காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிக எண்ணிக்கையில் திரண்டதால் கட்டுப்படுத்த இயலாத நிலையில் வேறு வழியின்றி ரயில் நிலைய வளாகத்திற்குள் காவல்துறையினர் அனுமதித்தனர். இதனையடுத்து அங்கு குவிந்த போராட்டக்காரர்கள் மோடி அரசிற்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாநகரில் பெரும்பாலான ஆட்டோக்கள், டேக்சி, டெம்போக்கள் இயங்கவில்லை. இதேபோன்று ஆளும் கட்சியான திமுக இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கியது.
 

;