tamilnadu

img

கஞ்சா செடிகள் பயிரிட்டவர்கள் 4 பேர் கைது...

கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே காய்கறிகளுக்கு இடையே கஞ்சா பயிரிட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் அங்குள்ள நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் தாமோதரன் மற்றும் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட  சோதனையில் அந்நிலத்தில் ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிந்தது. மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தபோது கஞ்சா செடிகளை பயிரிட்டது பசுமணி கிராமத்தில் வசிக்கும் செல்லன்(60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33) மற்றும் வேலுச்சாமி (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், 4 பேரையும் கைது செய்ததோடு அங்கு பயிரிடப்பட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,  சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா செடிகளை சோதனை செய்தார். அக்கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு போதைப்பொருளான கஞ்சா  பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்துள்ளார்.