அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சுமார் 25 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.
கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அன்னூர், பொகலூர், கைகாட்டி, ஆணைப்பள்ளி புதூர், தாளத்துறை, கஞ்சநாயக்கன் பாளையம், சேம்சம் பட்டி உள்ளிட்ட பகுதியில் சுமார் 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சூறாவளி காற்று மற்றும் பலத்த மழைக்கு சாலையோரங்களில் இருந்த 15க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்துவிழுந்தன. பலத்த காற்றுக்கு மின் கம்பங்கள், மின் வயா்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு வரை வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்
இது குறித்து அப்ப பகுதி விவசாயிகள் கூறும்போது, அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான விவசாயிகள் வாழை சாகுபடி பிரதான தொழிலாக கொண்டுள்ளோம், நேற்று காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் வேரோடு சரிந்து விட்டன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளதால் தற்போது சாய்ந்த வாழை மரங்களை எதுவும் செய்ய முடியாது. சரிந்த வாழை மரங்களை அப்புறப்படுத்த ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும். எனவே அரசு இதனை பரிசீலித்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர்.