tamilnadu

img

கோபியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?

கோபி, மே 13-கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் இரண்டாம் போக சாகுபடி நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலைங்கள் திறக்கப்படாததினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும்அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெற்று வருகிறது.இப்பகுதியில் தற்போது இரண்டாம்போக பாசனத்தில் கூகலூர், புதுக்கரைபுதூர், மேவாணி, கருங்கரடு, தண்ணீர்பந்தல்பாளையம், அத்தாணி, காசிபாளையம், பங்களாபுதூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல் விளைந்து அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று விருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் நெல் அறுவடை தொடங்கும் போதே மாவட்டம் முழுவதும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால்இந்த ஆண்டு இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்தநெல்லை தனியாருக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஓரளவு மழைபெய்ததால் இரண்டு போக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே தண்ணீரை நிறுத்தி விட்டனர். அதனால் உடனடியாக நெல் அறுவடை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அறுவடை செய்த நெல்லை தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்குவிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக ரூ.20ஆயிரம் வரை நட்டம் ஏற்படும். எனவேமாவட்ட நிர்வாகம் உடனடியாகநேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், அரசின் நெல் கொள்முதல்நிலைய விலையைக் காட்டிலும் பொதிக்கு ரூ.200 முதல் 300 வரை குறைத்து அதாவது ரூ.4200 க்கே தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்வதாகவும், இதே அரசு கொள்முதல் நிலையத்தில் குண்டு ரகத்திற்கு ரூ.4500 வரையும், சன்னரகத்திற்கு ரூ.4580 வரையும் விலை கிடைக்கும். எங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கோபி காசிபாளையத்திலும், அத்தாணி, கள்ளிப்பட்டி, ஏழூர்,புதுவெள்ளியம்பாளையம், டிஎன்பாளையம், என்ஜிபாளையம், புதுக்கரைபுதூர், கூகலூர் மற்றும் காளிங்கராயன் பாசனப்பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.