tamilnadu

பரவலான மழை பொழிவால்

ஈரோடு, ஏப். 22-ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளபாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 46 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஜனவரி மாதம் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் உள்ள இரட்டைப்படை மதகுகளுக்கு சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளுக்கும் புன்செய் பாசனத்தில் நிலக்கடலை, எள் மற்றும் சோளம் பயிரிடுவதற்காக முறை விட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. 6 சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்ததால் 5 சுற்றுகளாக குறைக்கப்பட்டது.பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 650 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் ஞாயிறன்று சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு உள்ளிட்ட பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திங்களன்று அணையின் நீர்மட்டம் 53.50 அடியாகவும், நீர் இருப்பு 5.3 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 192 கன அடியாக உள்ளது.

;