tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களியுங்கள் சிபிஐ (எம்எல்) விடுதலை அறைகூவல்

கோவை, ஏப். 8-

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை வெற்றி பெறவைக்குமாறு வாக்காளர்களுக்கு சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஞாயிறன்று பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் குமாரசாமி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தலைவர்கள், மதவெறி சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும். கார்ப்பரேட் பெருமுதலாளிகள் இந்திய நாட்டின் வளங்களை சுரண்டுவதை தடுக்க வேண்டும். இத்தகைய உரிமைக்கான குரலை நாடாளுமன்றத்தில் எழுப்பும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளராக கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை உழைப்பாளி மக்கள் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என அறைகூவல் விடப்பட்டது. முன்னதாக, இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை அறிமுகப்படுத்தியும், ஆதரித்தும் சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம்.கே.நடராஜன், மாநகர செயலாளர் வேல்முருகன், பிரிக்கால்தொழிற்சங்க தலைவர்கள் சுவாமிநாதன், நடராஜன், ஜெயபிரகாஷ் நாராயணன், ராஜேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். இந்த கூட்டத்தில் தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

;