அவிநாசி, ஆக.25 அவிநாசி அருகே சேவூரில் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்களும், வாகன ஓட்டிக ளும், குழந்தைகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் பகுதி யில், ராஜவீதி, வடக்கு வீதி, ஏரிமேடு, மாரியம்மன் கோவில் வீதி, கோபி சாலை, புளியம்பட்டி சாலை, குன்னத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துகின்றனர். மாணவ, மாணவியர்களில் பலர் சைக்கிள்களில் பள்ளிக்கு செல்கின்றனர். இந்நிலையில், சேவூர் ரவுண்டானா பகுதியில் தெரு நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகனத்தில் வருபவர்களை தெரு நாய்கள் துரத்தியும், மோதியும் பெரும் விபத்துகளை எற்படுத்தி வருகின்றன. இதனால் வாகனஓட்டிகள் படு காயமடைகிறார்கள். அதே போல் பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தைகளையும், சைக்கிள்களில் செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்களை துரத்தியும், கடித்தும் விடுகிறது. இதனால் இவ்வழியே செல்பவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே, இப்பகுதியில் உள்ள தெரு நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.