உடுமலை, மே 17-மடத்துகுளம் தாலுகா பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்துவரும் தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர்அலுவலகத்தை வெள்ளியன்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மடத்துகுளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் பலவருடங்களாக குடியிருக்கும்தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். அதேபோல், கொமரலிங்கம் பகுதியில்அரசின் சார்பில் பட்டா வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்றுவரை நிலங்களை முறையாக அளவீடு செய்யாமல் உள்ளதை, முறையாக அளவீடு செய்து உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும். பெருமாள்புதூர் பகுதியில் பல தலைமுறையாக வாழ்த்து வரும் இந்து காட்டு நாய்க்கர் சமூகத்திற்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் வெள்ளியன்று மடத்துகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பட்டா குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். காட்டு நாய்கர் சமூக மக்களுக்கான சாதி சான்றிதழ் பிரச்சனை குறித்து கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.முன்னதாக, இந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மடத்துகுளம் தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சி. சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பன்னீர்செல்வம், விவசாயகள் சங்கத்தின் நிர்வாகிகள் எம்.எம். வீரப்பன், முத்துசாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பழனிசாமி, கொமரலிங்கம் கிருஸ்ணசாமி, சிஐடியு சங்கத்தின் ஆர்.வி. வடிவேல் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.