tamilnadu

நாம்பெத்த மகளே...!

“அந்த ஈனச்சாதி பையனத் தான் கட்டுவேன்னு சொன்னா அவள கண்டதுண்டமா வெட்றா” என்ற ஊர்ப்பெரியதனத்தின் உருமலுக்கு உடன் இருந்த பெருசுகளும் இளந்தாரிகளும் ஒத்து ஊதினர்.பெற்ற மகளையே வெட்டுவதா.. வேலுச்சாமியின் நெஞ்சம் பதைபதைத்தது.

“வேலு நமக்கு மானம் மரியாதை தான் முக்கியம். அவ இஷ்டத்திற்கு ஒரு சேரிப்பயல இழுத்துட்டு ஓடுனா இந்த ஊர்ல மீசை வச்ச ஆம்பளன்னு ஒரு பயலும் இருக்க முடியாது. அம்புட்டு பேரும் நாண்டுகிட்டு சாக வேண்டியது தான். பேசாம கதைய முடிச்சிரு” என பெரியதனம் குரலை மாற்றி வேலுச்சாமியை படுபாதக குழிக்குள் இறக்கினார். “நாம்பெத்து வளத்த புள்ளய நானே எப்படி... “ அதற்கு மேல் வேலுச்சாமிக்கு வார்த்தைகள் வரவில்லை. மேல்துண்டால் வாயை மூடிக்கொண்டு அழுதார். “அதுக்கு தாண்டா நாங்க இருக்கோம் தகிரியமா முடிவு பண்ணு காரியத்த கச்சிதமா முடிச்சிறலாம்” என பெரியதனம் வேலுச்சாமியின் தோளைத் தட்டிக் கொடுத்தார். 

கிழக்கே தோன்றிய நிலா உச்சிக்கு வந்தபோது ஊர் அடங்கி இருந்தது. ஊருக்கு மேற்கே மயானத்தில் இருந்த புளியமரத்தோடு மரமாய் செல்வி கட்டப்பட்டிருந்தாள். கூட்டத்திலிருந்து விலகி நின்ற வேலுச்சாமியை பார்த்து “அப்பா..” என அருகில் அழைத்தாள். வேலுச்சாமி நடுங்கும் குரலில் “என்னம்மா..” எனக் கேட்டார். “அப்பா என்னை எரிக்கிறதுக்கு முன்னாடி நான் போட்டிருக்கிற நகைகளை கழட்டி பத்திரமா அம்மா கையில கொடுத்திருங்கப்பா தங்கச்சிக கல்யாணத்துக்கு அது உதவும்” என செல்வி உருக்கமாக வேண்டினாள். அதைக் கேட்டதும் வேலுச்சாமிக்கு அங்கமெல்லாம் பதறியது. “நாம்பெத்த மகளே..” என அரற்றியவர் “ஒன்ன பலி கொடுத்துட்டு நாங்க உயிரோட எப்பிடிம்மா வாழறது” என கதறியவாறு கட்டுக்களை அவிழ்த்து செல்வியை காப்பாற்றப் போனார். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியதனம் “அவன இழுத்துப் புடிங்கடா மண்னெண்ணைய ஊத்தி அவள பத்த வைங்கடா” என உஷ்ணமாக உத்தரவிட்டார். அடுத்த கணம் செல்வியின் உடல் தீப்பற்றி திகுதிகுவென எரிந்தது. முரட்டுக் கரங்களால் சுற்றி வளைக்கப்பட்ட வேலுச்சாமி “அய்யோ.. அய்யய்யோ.. எம்மகள காப்பத்துங்களேன்” என அலறிய சத்தம் அந்த நிலவுக்கும் கேட்டது.