அரக்கபரக்க ஆனந்த் உள்ளே நுழைந்தபொழுது அம்மா அவனுக்காக காத்திருந்தாள். இவனைப் பார்த்த சந்தோசத்தில் அம்மாவின் கண்களில் நீர் துளிர்த்தது. அம்மாவின் அருகில் ஆனந்த் அமர்ந்தான். அம்மா, அவனை முழுவதுமாக பார்த்துவிட்டு, “நல்லா இருக்கியாப்பா” எனக் கேட்டாள். அதற்கு ஆனந்த் பதில் சொல்லவில்லை. அவன் அம்மா முகத்தைப் பார்க்காமல் சுவற்றில் மாட்டியிருந்த அன்னை தெரசாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அம்மாவின் கனிவு தெரிந்தது. அம்மா, “ரம்யா, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களாப்பா” என கேட்ட கேள்வி காதில் விழாதவன் போல ஆனந்த் அமைதியாக இருந்தான். வர வேற்பறை தரையை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டிருந்த பணியாள் பார்வதி “எப்பப் பார்த்தாலும் அம்மாவுக்கு உன் நெனப்புத்தாம்பா அடிக்கடி வந்து பாருப்பா” என்றவாறே வாளியைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். ஆனந்த் கையிலிருந்த துணிப் பையை அம்மாவிடம் தந்தான். அதில் ஆர்லிக்ஸிம், சாத்துக்குடிப் பழங்களும், ரொட்டியும் இருந்தன. “இதெல்லாம் எனக்கெதுக்குப்பா...வீட்டுக்கு கொண்டு போப்பா” என கூறியவள், “கம்பெனியில் வேல ஜாஸ்தியாப்பா உடம்பெல்லாம் மெலிஞ்சு போயிருக்கு, கண்ணெல்லாம் உள்ள போயிருக்கு” என கவலைப்பட்டவள், ஆனந்தின் வலது கையை எடுத்து தன் உள்ளங்ககைளில் புதைத்துக் கொண்டாள். ஆனந்து சிறுவனாக இருக்கையில் அம்மாவைக் கட்டியணைத்தவாறு தூங்கிய பொழுது ஏற்பட்ட கதகதப்பை தற்பொழுது உணர்ந்தான். அவனுக்கு அம்மா...என கதறி அழ வேண்டும் போலிருந்தது. மரங்களடர்ந்த கட்டிட வளாகத்தைக் கடந்து, ரோட்டுக்கு வந்ததும் வெயில் சுள்ளென்று உரைத்தது. ஷேர் ஆட்டோ நிற்கும் இடம் வரை நடந்து வந்ததில், வியர்வை சட்டைக் காலரை நனைத்து இருந்தது. ஷேர் ஆட்டோ வந்ததும் முதல் ஆளாக ஏறி ஜன்னல் பக்கம் உட்கார்ந்து கொண்டான். கிளம்பும் நேரத்தில் “கொஞ்சம் நிறுத்துங்க” என்று ஓடி வந்து ஆட்டோவில் ஏறிய பார்வதியின் கையில் ஆர்லிக்ஸிம், சாத்துக்குடிப் பழங்களும், ரொட்டியும் நிறைந்த துணிப்பை இருந்தது. எங்கே பார்வதி பார்த்து விடுவாளோ என்ற பதட்டத்தில் ஆனந்த்; ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டான்.