கோவை, மே 14-சூலூரில் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய பூத் சிலிப்பைஅதிமுகவினர் பறித்த சம்பவத்தைஅறிந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதியில் வருகிற 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுகவின் பொங்கலூர் நா.பழனிசாமி மற்றும் அதிமுக, அமமுகஉள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சூலூர் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தங்கவேல், பூத்சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அதிமுக முன்னாள்ஊராட்சி தலைவர் பாலு என்றபாலசுப்பிரமணியம் மற்றும் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆறுமுகம் ஆகியோர் தங்கவேலுவை மிரட்டி பூத் சிலிப்பை பெற்றுள்ளனர். இவர்கள் திமுகவினரின் பூத் சிலிப்புகளை வழங்காமல், அதிமுகவினரின் பூத் சிலிப்புகளைமட்டுமே வழங்கியுள்ளனர். இதனையறிந்த அப்பகுதி திமுக தேர்தல் பொறுப்பாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், அறிவரசு மற்றும் குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட திமுகவினரும், பொதுமக்களும் கிராம நிர்வாக அலுவலக ஊழியர் தங்கவேலை சிறைப்பிடித்து தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.இந்நிலையில், அதிமுகவினர் இந்த பிரச்சனை வெளியே தெரியாமல் இருக்க கிராம நிர்வாக அலுவலரை வெளியே விடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டார். பின்னர்சிறைப்பிடிக்கப்பட்ட கிராம நிர்வாக உதவி அலுவலரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.