கோவை, டிச. 11- சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இனி மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் பிடிக்கக் கூடாது என சூயஸ் நிறுவன ஊழியர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோகமானது பிரான்சு நாட்டின் சூயஸ் நிறுவனத்திடம் மாநகராட்சி நிர்வாகத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 26 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து தொடர் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சூயஸ் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் தண்ணீர் விநியோகத்தை எடுத்துவிட்டால் பொதுக்குழாய்கள் அகற்றப்படும் அபாயம் ஏற்படும் என அரசியல் கட்சியினர் எச்சரித்து வந்தனர். இச்சூழலில், தற்போது அது உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக சூயஸ் நிறுவனம் தனது கெடுபிடியை ஆரம்பித்துள்ளது. கோவை மாநகரம் புலியகுளம் பகுதியில் மிகப்பெரிய அளவிற்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் 69 மற்றும் 70 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி மற்றும் தனியார் லாரிகளில் தண்ணீர் பிடித்து பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் வருகிறது. இதேபோல், இப்பகுதி மக்கள் பொதுக்குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்றால் இந்த தண்ணீர் தொட்டியில் உள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து செல்வது வழக்கம். இந்த தொட்டி கட்டப்பட்ட நாளிலிருந்து பல ஆண்டுகாலமாக இங்கு மக்கள் தண்ணீர் பிடித்து சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடிக்க செல்பவர்களை அங்குள்ள ஊழியர்கள் விரட்டி வந்துள்ளனர். மேலும், பொதுமக்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக இரும்புக்கதவையும் இழுத்து மூடியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கேள்வி எழுப்பியதற்கு, அங்கிருந்த ஊழியர்கள், இது சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தண்ணீர் தொட்டி. நான் சூயஸ் நிறுவனத்தின் ஊழியர், இங்கு இனிமேல் பொதுமக்கள் யாரும் வந்து தண்ணீர் பிடிக்கக்கூடாது என பேசியதோடு பெண்களிடம் தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் முறையாக தண்ணீர் விநியோகம் இருப்பதில்லை. அப்படியே வந்தாலும் மூன்று மணி நேரம் மட்டும் திறந்து விடுகிறார்கள். அதுவும் நள்ளிரவு, அதிகாலை என நேரம் கெட்ட நேரத்தில் திறந்துவிடுவார்கள். எங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் இவ்வளவு பெரிய தண்ணீர் தொட்டி இருப்பதால் அவசரத்திற்கு இங்கு சென்று தண்ணீர் பிடித்துக் கொள்வோம். இந்நிலையில் திடீரென இங்குள்ள ஊழியர்கள் இந்த தண்ணீர் தொட்டி அரசுக்கு சொந்தமானதல்ல, சூயஸ் என்கிற நிறுவனத்திற்கு சொந்தமானது. இனிமேல் தண்ணீர் பிடிக்கக்கூடாது. நாங்கள் எப்போது பிடிக்க சொல்கிறோமோ, அப்போதுதான் தண்ணீர் பிடிக்க வேண்டும். இனி மறியல் செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்கின்றனர். இத்தனை வருடமாக நாங்கள் இங்கு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தோம், இப்போது தடுப்பது ஏன் என்றே தெரியவில்லை என்றனர். இதனிடையே, சூயஸ் நிறுவன ஊழியர்களின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை கிழக்கு நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ் தலைமையில் திமுக, காங்கிரஸ், சிஐடியு உள்ளிட்ட அமைப்பினர் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். இதன்பின் அவர்கள் கூறுகையில், ஆரம்பத்தில் இருந்து சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகத்தை தரக்கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தோம். ஆனால் இதுகுறித்து எந்த கவலையும்படாத கோவை மாநகராட்சியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணியும் மழுப்பலான பதிலையே தந்து கொண்டிருந்தனர். இப்போது எங்கள் பகுதி மக்களின் வாசலுக்கே சூயஸ் நிறுவனம் வந்து தொட்டியில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என உத்தரவிடுகின்றனர். இதுதொடர்பாக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவே முதற்கட்டமாக மனு அளித்துள்ளோம் என்றார். இம்மனுவினை அளிக்கையில் காங்கிரஸ் கட்சியின் செ.பார்த்திபன் மற்றும் வீராச்சாமி, மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.