tamilnadu

தாராபுரம் வணிக வளாகத்தில் திருடிய ஊழியர் கைது

தாராபுரம், மே 9-தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் மதுரை பங்கஜம் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வணிக வளாக காவலாளியை அழைத்து தனக்கு இன்று பிறந்த நாள் நண்பர்களுக்கு மது விருந்து அளிக்க வேண்டும். மதுவாங்கி வாருங்கள் என்று பணம் கொடுத்து அனுப்பினார்.காவலாளி மதுவாங்க சென்றிருந்தபோது சதீஷ்குமார் கடையில் இருந்து விலை உயர்ந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தப்பினார். திரும்பி வந்து பார்த்த காவலாளி கடையில் சதீஷ்குமார் மாயமானது குறித்தும், பொருட்கள் சிதறி கிடப்பதை அறிந்தும் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இது குறித்து பொது மேலாளர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது ஊழியர் சதீஷ்குமார் பொருட்களை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.இது குறித்து அவர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுரையில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை புதனன்று கைது செய்தனர். 

;