மேட்டுப்பாளையம், மே 29-லாட்டரி அதிபர் மார்டின் நிறுவனகாசாளர் சடலமாக மீட்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் சிறப்பு மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்து, பரிசோதனைக்காக குட்டையின் நீரை எடுத்து சென்றனர். பிரபல தொழிலதிபரும், லாட்டரி சீட்டுவிற்பனையாளருமான மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தவர் கோவை உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி. இவர் கடந்த மே 3 ஆம் தேதியன்று மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காடு நீர்தேக்க குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். மார்டினுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு பின்னர் நடைபெற்ற இம்மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இதனையடுத்து அவரது உறவினர்கள் தொடர்ந்த வழக்கில், பழனிசாமியின் உடல் சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி செவ்வாயன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் மேற்பார்வையில் கோவை அரசு பொது மருத்துவமனையில் வைக்கபட்டிருந்த பழனிசாமியின் உடலைமறு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவனையின் தலைமை மருத்துவர் சம்பத்குமார் முன்னிலையில், சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவர் கோகுல்ராம், கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் மேற்கொண்டனர்.இதைத்தொடர்ந்து, பழனிசாமியின்உடல் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டதால், அவர் கண்டெடுக்கப்பட்ட வெள்ளியங்காடு நீர்தேக்க குட்டைக்கு வந்த மருத்துவக்குழுவினர் அங்கு ஆய்வுநடத்தினர். பின்னர் குட்டையின் நீரை பாட்டிலில் எடுத்து பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பழனிசாமி இக்குட்டையின் நீரில் மூழ்கி இறந்திருந்தால் பிரேத பரிசோதனையின்போது அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட நீர், தற்போது பரிசோதனைக்காக எடுக்கப்பட்டஇந்நீர்தேக்க குட்டையின் தண்ணீரோடு ஒத்துப்போக வேண்டும். இந்த ஒப்புமைஆய்விற்காகவே நீதிமன்ற பரிந்துரையிக்படி அமைக்கப்பட்ட இந்த சிறப்பு மருத்துவக்குழுவினர் பழனிசாமியின் உடல் மீட்கப்பட்ட குட்டைக்கு வந்துள்ளனர் எனகாவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.சிறப்பு மருத்துவக்குழுவினர் மூலம்நடைபெற்ற இந்த மறுபிரேத பரிசோதனை மற்றும் நீர்தேக்க குட்டை நீர் ஆய்வு போன்றவற்றால், பழனிசாமி இறப்பு குறித்த முழுமையான மருத்துவ ரீதியிலான விபரங்கள் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.