மேட்டுப்பாளையம், அக்.17- மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே தந்தையை கொலை செய்து வீட்டுக்குள் புதைக்க முயன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பகுதி சிறுமுகையை அடுத்துள்ள சின்னக்கள்ளிப்பட்டி கிராமம் சண் முகாபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் மாகாளி (60). கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மனைவி பூவாள் (52). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவி இறந்ததும் மாகாளி தனியாக வசித்து வந்தார். இவரது மகன் சிவராஜ் (40). இவருக்கு திருமணமாகி அதே பகுதியில் வசித்து வந்தார். தந்தை மாகாளிக்கும் மகன் சிவராஜூக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் புதனன்று (அக.16) இரவு சிவ ராஜ் குடிபோதையில் தந்தையின் வீட்டிற்கு சென்றார். இருவரிடையே மீண்டும் தகராறு ஏற் பட்டதாக தெரிகிறது. போதையில் இருந்த சிவ ராஜ் ஆத்திரமடைந்து தனது தந்தையை அடித் துக் கொலை செய்தார். இதன்பின் தனது தந்தையின் உடலை மறைக்க வீட்டிற்குள்ளேயே குழிதோண்டி புதைக்க இரவோடு இரவாக குழி தோண்டினார். மாகாளியின் வீட்டிற்குள் ஏதோ சப்தம் கேட்டதும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் மாகாளியின் வீட்டை நோக்கி வந்தனர். இதனை கண்ட சிவராஜ் வீட்டைப்பூட்டி விட்டு தப்பியோடி தலைமறைவானார். இதுகுறித்து வியாழனன்று காலை சிறுமுகை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரணை செய்தனர். மாகாளியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் தலைமறைவான சிவராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.