வேளாண் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
கோவை, ஜூன் 6-தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு ஜூன் 7ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பில் சேர்வதற்கு மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருப்பதினால், தற்போது இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 17 ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய ஜூன் 18,19 மற்றும் 20 ஆகவும்,சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சான்றிதழ் சரிபார்க்க 19,20, மற்றும் 21 ஆம் தேதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 27ஆம் தேதிதரவரிசைப் பட்டியில் வெளியிடப்படும் என கோவை வேளாண்மைப்் பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கோவை, ஜூன் 6-கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின்வசதிக்காகப் பல்வேறு சொகுசு விடுதிகள் ஹோட்டல்கள், பண்ணை வீடுகள் மற்றும் விடுதிகள்செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு அமையப்பெற்றுள்ள அனைத்து வகையிலான தங்கும் விடுதிகளும் விதிமுறைகளின்படி அமையப்பெற்றிருக்க வேண்டும். இவற்றிற்கு முறையான அனுமதி பெற்றிருப்பதுடன், உரியகாலத்தில் அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும், சொகுசு விடுதிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் நெறிமுறைகளை மீறாமல், விடுதிகள் செயல்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்திட வேண்டும்.இந்நிலையில் அனுமதியின்றி நடத்தப்படும் விடுதிகளை கணக்கெடுத்து ஆய்வு செய்திட வட்ட அளவில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கள ஆய்வின் போது முறையான அனுமதி பெறாத சொகுசு விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி அந்த விடுதிகள் மூடப்படும். மேலும் அதன் உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி கோவை அரசு மருத்துவமனையில் முன்னேற்பாடுகள் தீவிரம்
கோவை, ஜூன் 6-நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தொற்று பரவியதால் 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு இளைஞர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவின் அருகாமையில் இருக்கும் தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை அரசு மருத்துவமனையை பொருத்தவரையில், சந்தேகத்துக்கு இடமான காய்ச்சல் பாதிப்புகளுடன் வருவோர்க்கு சிகிச்சை அளிக்கும் விதமாக 30 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுகாதார துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. மக்கள் அச்சமடைய தேவையில்லை. காய்ச்சல் மற்றும்நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும். சுகாதாரமான பழங்களை உட்கொள்ள வேண்டும். கைகளைதூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
சேலம், ஜூன் 6-உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சேலத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.சேலம் வனத்துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.சேலம் அஸ்தம்பட்டியில் தொடங்கிய இந்த பேரணிஒருங்கிணைந்த நீதிமன்றம், கோரிமேடு, கொண்டமநாயக்கன்பட்டி சென்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் நிறைவு பெற்றது.இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்துகின்ற வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புகுறித்த துண்டு பிரசுரங்களை ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, அரசு துறை அலுவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.