தருமபுரி, மே 29-சேலம் -சென்னை 8 வழி சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என பேசிய தமிழக அமைச்சர் ம.பா.பாண்டியராஜனை கண்டித்து அரூரை அடுத்த நாச்சினாம்பட்டியில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கான நிலம் எடுப்புக்கான அரசு ஆணையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு 7 சதவிகித விவசாயிகள் மட்டும் எதிர்ப்புதெரிவிப்பதாகவும், எட்டுவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக அமைச்சர் ம.பா.பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் புதனன்று தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த நாச்சினாம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கஒருங்கிணைப்பாளர் கே.பழனியப்பன் தலைமை வகித்தார். இதில்சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று விவசாயிகளின்வாழ்வாதாரத்தை முற்றிலுமாக பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.