சேலம், மே 13-அரசு போக்குவரத்து கழக பணியாளர் வீடு கட்டும் சங்கத்தினர் பணி முடிந்தும் அலுவலகத்தை காலி செய்யாமல் தொடர்ந்து அங்கேயே இருப்பதை கண்டித்து, ஏடிசி நகர் குடியிருப்போர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் கோரிமேடு பகுதியில் உள்ளஏடிசி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருபவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு 1983 ஆம் ஆண்டு தொழிலாளர்களின் சொந்தப் பணத்தில் வீடு கட்ட அண்ணா போக்குவரத்து கழகம் முடிவு எடுத்து அதற்கான நிதியை கடனாக வழங்கி வீடுகளை கட்ட அனுமதி தந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட கடனை வசூலிக்க அரசு போக்குவரத்து கழக வீடு கட்டும் பணியாளர் சங்கம் அமைத்து பணம் வசூலிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் வாங்கிய கடனை திருப்பித் தந்த நிலையில் தொடர்ச்சியாக அந்த சங்க அலுவலகம் ஏடிசி நகர் பகுதியிலேயே இருந்து வந்துள்ளது. இதுமட்டுமின்றி பணியாளர் சங்கத்தின் சார்பில் அருகிலிருந்த மற்றொரு வீட்டை நியாய விலை கடைக்கு உள்வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை பணியாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் தலைவர் உள்ளிட்டோர் அனுபவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துஅக்குடியிருப்பு வாசிகள் மாவட்ட இணை பதிவாளரிடமும் மனு அளித்துள்ளனர். அப்போது. பணியாளர் சங்கத்தின் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு மாவட்ட இணைபதிவாளர் சங்க நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் தற்போது வரை அந்த இடத்தை காலி செய்யாமல் இருப்பதை கண்டித்தும், அதனை உடனடியாக காலிசெய்யக்கோரி ஏடிசி நகர் நல சங்கம்சார்பில் அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த அழகாபுரம் காவல்துறையினர் ஏடிசி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.