tamilnadu

கோவை மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

ரூ.3 லட்சம் பறிமுதல்

கோவை, மே 7-சூலூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாயன்று அதிகாலை சிந்தாமணி புதூர் பகுதியில்வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரள மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று வந்தது. மலப்புரத்தை சேர்ந்தஜேம்ஸ் என்பவர் வந்த அவ்வாகனத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையிட்டதில் ரூ.3 லட்சம் பணம் இருந்தது. பணத்்திற்கான ஆவணங்கள் எதுவுமில்லாததால் பறிமுதல்செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


கைத்தறி சங்கங்களுக்கு 8 ஆண்டுகளில் ரூ.450 கோடி

தள்ளுபடி மானியம் தராததால் நெசவுத் தொழில் நெருக்கடி

திருப்பூர், மே 7 –தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தொகை 2011-ம் ஆண்டு முதல் 2018-ஆண்டு வரை சுமார் ரூ.450 கோடியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் அனைத்து கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் மூடும் ஒரு அபாயநிலையை அரசு உருவாக்கி உள்ளது என்று தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் சங்கம் கூறியுள்ளது.இந்த சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தள்ளுபடி மானியம் நிலுவை இருப்பதால் நெருக்கடி ஏற்பட்டு கூட்டுறவு சங்கங்களை மூடிவிடும் நிலை உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் எதுவும் கிடைக்காத ஒரு நிலை ஏற்படும். அரசு கூட்டுறவு சங்கங்களை கடந்த சில ஆண்டுகளாக ஒழுங்காக நடத்தாததால், தொழிலாளர்கள் சரியாக வேலை கிடைக்காமல் தனியார் உற்பத்தியாளர்கள் வழங்குகிற சொற்ப கூலிக்கு வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே கைத்தறி நெசவுத் தொழிலாளர் தங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காக பெற்ற வங்கிக்கடன் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கர்நாடக அரசு ஆண்டுக்கு 25,000-ம் காங்கிரீட் வீடுகளை கைத்தறி நெசவாளர்களுக்கு இலவசமாக கட்டிக்கொடுத்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும், அரசு இலவசமாக வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். இதற்காக அனைத்துப் பகுதிகளிலும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நிலங்களை கையகப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி, அதில் இலவசமாக காங்கிரீட் வீடுகளை வீடில்லாத அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

;