திருப்பூர், மே 22 –திருப்பூர் மாநகராட்சி 15ஆவது வார்டு மாரப்பகவுண்டர் லே அவுட் பகுதியில் சாலைகள், சாக்கடை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.இப்பகுதியைச் சேர்ந்த அண்மையில் ஐஏஎஸ் பயிற்சி நிறைவு செய்த எஸ்.பாலச்சந்தர் உடன் இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எஸ்.விஸ்வநாதன், செயலாளர் என்.குமரேசன், பொருளாளர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் ஆட்சியருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாரப்பகவுண்டர் லே அவுட் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாலைகள் மற்றும் சாக்கடைகள் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இடைப்பட்ட காலத்தில் இதுவரை சாலையைச் செப்பனிடவோ, சாக்கடைகளைத் தூர்வாரி கழிவுநீர் தடையின்றி செல்லவோ முறையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.மழை பெய்யும் நிலையில் மழைநீர் வடிகால் ஏற்பாடும் இல்லாததால் மழைநீர் மாரப்பகவுண்டர் லே அவுட் பகுதியில் உள்ள சாலைகளில் குளம் போல் தேங்கி விடுகின்றது. இதனால் இப்பகுதி மக்களுக்கு போக்குவரத்துக்கு சிரமமும், கடும் நெருக்கடியும் ஏற்படுகிறது.இது தொடர்பாக குடியிருப்போர் சங்கம் சார்பாகவும், பொது மக்கள் சார்பாகவும் பல முறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனுக் கொடுத்தும் பயனில்லாத நிலையை நீடிக்கிறது. எனவே இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க சாலை, சாக்கடை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.