tamilnadu

அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை

திருப்பூர், மே 31 -அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் பெறுதல், மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகியவற்றிற்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி கோரியுள்ளார்.இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாணவர்களுக்கு ஐயம் இருந்தால் விடைத்தாள் நகல்பெறுதல், மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றிற்கு உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதில் விடைத்தாள் நகல் பெற்ற பிறகே மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்காதவர்களும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் பெற ரூ.275,மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்களுக்கு ரூ.305, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே தொகையாகச் செலுத்த வேண்டும். மாணவர்கள் விடைத்தாள் நகல்மற்றும் மறுகூட்டலுக்கு தங்கள் பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.தற்போது  12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதிய மாணவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  விடைத்தாள் நகல்கேட்டும், மறு மதிப்பீடு மற்றும் மதிப்பெண் மறு கூட்டல் ஆகியவற்றிற்காக விண்ணப்பித்துள்ளனர். பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ததிலும், மதிப்பெண் அளித்ததிலும், மதிப்பெண் கூட்டலிலும் அதிகமான தவறுகள் இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளன. மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் மூலம் பலருடைய மதிப்பெண் அதிகரித்துள்ளது. இது போன்ற தவறுகளால் கல்லூரிக் கல்விச் சேர்க்கையிலும், வேலைவாய்ப்புப் பெறுவதிலும் மாணவர்கள்  பாதிப்புக்கு ஆளாகின்றனர்.பெரும்பாலும் வசதியுடைய தனியார் பள்ளி மாணவர்களே விடைத்தாள் நகல் பெறுதல், மறுமதிப்பீடு,  மறுகூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த முடிகின்றது.  அரசுப் பள்ளிகளில் படிக்கும் வசதியில்லாத மாணவர்கள் பலர் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனால் உரிய மதிப்பெண்கள் அளிக்கப்படாமல், குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்ட ஏழை மாணவர்கள் உயர்கல்விச் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புப் பெறுவதில் பாதிப்புக்கு ஆளாவர்.எனவே, வரும் ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் பெறுதல், மறுமதிப்பீடு, மறு கூட்டல் ஆகியவற்றிற்கான கட்டணத்தை ரத்து செய்ய கல்வித்துறை முன்வர வேண்டும். இவ்வாறு சு.மூர்த்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்.