அன்று…
கல்வி நகரம் என்று போற்றப்படும் கோவையில் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு மையம் அமைக்கவேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பி.ஆர்.நடராஜன் மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். அதுகுறித்த அவரது கடிதத்திற்கு அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் 23.7.2012 அன்று பதில் அளித்துள்ளார். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு மையங்களில் கோவையும் இடம் பெற்றது.
இன்று…
சென்னை மற்றும் மதுரைக்கு அடுத்தபடியாக கோவையில் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் கோவையை சுற்றியுள்ள மேற்கு மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரள கர்நாடக மாநில மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர்.அதேநேரத்தில் நீட் தேர்வு மையங்களை ராஜஸ்தான், கேரள மாநிலங்களுக்கு மாற்றி மோடி அரசு மாணவர்களையும், பெற்றோர்களையும் துன்புறுத்தியது. எடப்பாடி அரசு வேடிக்கை பார்த்தது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்த அரசு ஊழியரான கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுத கேரள மாநிலம், எர்ணாகுளம் அழைத்து சென்றார். தேர்வு மையத்திலிருந்து மகனின் வருகைக்காக பயணக்களைப்பில் காத்திருந்த கிருஷ்ணசாமி மாரடைப்பில் உயிரிழந்தார்.