பொள்ளாச்சி, ஏப்.5-
மதவாத சக்திகளையும், அடிமை அரசையும் வீட்டுக்கு அனுப்புவோம் என பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் பேசினார்.பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம், உடுமலை நகர பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த இருசக்கர வாகன பிரச்சாரத்திற்கு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெ ராமகிருஷ்ணன், திமுக உடுமலை நகரச் செயலாளர் மத்தீன்ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் மு.க.முத்து, மாவட்ட துணைச் செயலாளர் கனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் ராஜமாணிக்கம், முன்னாள் நகரமன்ற தலைவர் வேலுச்சாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகர செயலாளர் எஸ்.ஆா்.மதுசூதனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சௌந்தரராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்தனர்.முன்னதாக, இந்த பிரச்சார பயணத்தில் வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் பேசுகையில், அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம் உத்தரவாதம், கேபிள் கட்டணத்தை குறைப்பது, பெட்ரோல், டீசல்விலையை குறைக்க நடவடிக்கை போன்றவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும், மதவாத சக்திகளையும், ஆளுகின்ற அடிமை அரசையும் வீட்டுக்கு அனுப்ப, உதயசூரியன் சின்னத்தில்வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.