tamilnadu

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி

ஈரோடு, ஏப்.9-ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி செவ்வாயன்று நடைபெற்றது.நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடி மையங்கள், ஈரோடு மேற்கு தொகுதியில் 298 வாக்குச்சாவடி மையங்கள், மொடக்குறிச்சி தொகுதியில் 275 வாக்குச்சாவடி மையங்கள், பெருந்துறை தொகுதியில் 263 வாக்குச்சாவடி மையங்கள், பவானி தொகுதியில் 289 வாக்குச்சாவடி மையங்கள், அந்தியூர் தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்கள், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 296 வாக்குச்சாவடி மையங்கள், பவானிசாகர் தொகுதிக்கு 294 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.அங்கு பணியாற்ற 2 ஆயிரத்து 656 தலைமை அதிகாரிகள் நிலை-1, நிலை-2, நிலை-3 அலுவலர்கள் 7 ஆயிரத்து 968 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 624 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு பற்றி 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் முதல்கட்ட பயிற்சி கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி செவ்வாயன்று நடைபெற்றது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்திலும் நடந்தது. அங்கு வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் கருவிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வாக்காளர்களை உள்ளே அனுமதிக்கும் முறை, அவர்களுடைய அடையாள அட்டையை சரிபார்த்தல், வாக்குப்பதிவு செய்ததன் அடையாளமாக விரலில் மை வைத்தல், ஓட்டு போட அனுமதித்தல் போன்ற செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. 

;